வருமான வரியாகக் கட்ட வேண்டிய பணம்... வலி தெரியாமல் சேர்க்கும் வழிகள்..! Income TAx

 

வருமான வரியாகக் கட்ட வேண்டிய பணம்... வலி தெரியாமல் சேர்க்கும் வழிகள்..!

BHARATHIDASAN S

இன்றைய தேதியில் பலரும், ‘‘சம்பளம் போதவில்லை; அதனால் தான் கடன் வாங்குகிறோம்’’ என்கிறார்கள். இவர்களின் இந்தச் செயலுக்குக் காரணம், அவர்கள் சம்பளப் பணத்தை எப்படி பிரித்து செலவு செய்ய வேண்டும் எனத் தெரியாமல் இருப்பதே ஆகும்.

வருமான வரிப் பணத்தை சேமிக்கும் எளிய வழி...

ஒருவர் அவரின் சம்பளப் பணத்தை வருமான வரி போக உள்ள தொகையை மூன்றாகப் பிரித்து வைத்துக் கொண்டு செலவு செய்யத் தொடங்க வேண்டும். ஏன் என்று கேட்கிறீர்களா?

வருமான வரி போக மீதித் தொகை எனச் சொல்லக் காரணம், ஒருவர் ஆண்டு தோறும் வருமான வரி கட்டிதான் ஆக வேண்டும். அதை நிதி ஆண்டு ஆரம்பம் முதல் பிரித்துக் கட்டி வர வில்லை எனில், நிதி ஆண்டு இறுதியில் மொத்தமாக வருமான வரியைக் கட்டி தான் வரிக் கணக்குத் தாக்கல் செய்ய முடியும்.

மொத்தமாகக் கட்டுவதால் ஏற்படும் சிக்கல்...

நிதி ஆண்டு என்பது ஏப்ரல் 1-ம் தேதி தொடங்கி மார்ச் 31-ம் தேதி வரைக்கு மான 12 மாதங்கள் ஆகும்.பலரும் வருமான வரியை ஆண்டு இறுதியில் கடைசி இரு மாதங்களான பிப்ரவரி, மார்ச்சில் மொத்தமாகக் கட்டுகிறார்கள். அப்போது அவர்கள் சம்பளப் பணத்தை வருமான வரியாகக் கட்டி விட்டு, செலவுக்குப் பணம் இல்லாமல் திண்டாடு கிறார்கள்; தனிநபர் கடன் வாங்கி, நகையை அடமானம் வைத்து செலவு செய்யும் நிலைக்குத் தள்ளப்படு கிறார்கள். அல்லது கிரெடிட் கார்டை அதிகம் பயன்படுத்து கிறார்கள். விளைவு, இந்தக் கடன்களை சரியாக அடைக்க முடியாமல் அதிக வட்டி கட்டும் நிலைக்குத் தள்ளப் படுகிறார்கள்.



வருமான வரிச் சலுகைகள்...

உதாரணமாக, 40 வயதுள்ள ஒருவரின் நிதி ஆண்டு சம்பளம் ரூ.10 லட்சம். அதாவது, மாதச் சம்பளம் (Gross salary) ரூ.83,335. அவருக்கு பணியாளர் பிராவிடென்ட் ஃபண்ட் சந்தா (EPF), ஆயுள் காப்பீட்டு பாலிசி பிரீமியம், .எல்.எஸ்.எஸ் ஃபண்ட் முதலீடு என எல்லாவற்றுக்கும் சேர்ந்து ரூ.85,000 வருமான வரிக் கழிவு கிடைக்கிறது.

தவிர, அவருக்கும் அவரின் குடும்ப உறுப்பினர்களுக்கும் சேர்த்து எடுத்திருக்கும் மருத்துவக் காப்பீட்டு பீரிமிய மாக கட்டும் தொகை ரூ.15,000-ஆக உள்ளது. ஆக மொத்தம், அவருக்கு வரிச் சலுகை ரூ.1 லட்சம், நிலைக் கழிவு ரூ.50,000 இரண்டையும் கழித்தால் ரூ.8.5 லட்சத்துக்கு அவர் வருமான வரியைக் கட்ட வேண்டும்.

வரியைக் கணக்கிடுவது எப்படி?

60
வயதுக்கு உட்பட்ட ஒருவர் நிதி ஆண்டில் கிடைக்கும் ரூ.2.5 லட்சம் வரையிலான வருமானத்துக்கு வருமான வரியைக் கட்ட வேண்டாம். ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரைக்குமான தொகைக்கு 5% வருமான வரி கட்ட வேண்டும். அதாவது, ரூ.12,500 வருமான வரியாக இருக்கும். ரூ.5 லட்சம் முதல் ரூ.8.5 லட்சத்துக்கு அதாவது, ரூ.3.5 லட்சத்துக்கு 20% என்பது ரூ.70,000 வருமான வரி ஆகும். ஆக மொத்தம், இவர் ரூ.82,500 வருமான வரி கட்ட வேண்டும்.

இந்த வரி மீது 4% கல்வி மற்றும் ஆரோக்கிய தீர்வை ரூ.3,300 என மொத்தம் ரூ.85,800. இந்தத் தொகையை 12-ஆல் வகுத்தால் மாதம்தோறும் ரூ.7,150 வருமான வரியாகக் கட்ட வேண்டி வரும். இந்த ரூ.7,150 தொகையை மாதச் சம்பளமான 83,335-ல் கழித்துவிட்டு மீதியைதான் செலவு செய்ய ஆரம்பிக்க வேண்டும். அதாவது, மாதம் 76,185 ரூபாயை மட்டுமே செலவு செய்ய திட்டமிட வேண்டும்.

வரி கட்டுவதற்கு எந்தத் தொகையும் ஒதுக்கீடு செய்யாமல், எல்லாப் பணத்தையும் செலவு செய்து விட்டு, கடைசி மூன்று மாத காலத்தில் மொத்தமாக செலுத்தும்போது, பிற செலவுகளைச் சுருக்கிக் கொள்ள வேண்டியிருக்கும். அல்லது கடன் வாங்கிதான் சமாளிக்க வேண்டியிருக்கும். இந்த நெருக்கடியைச் சமாளிக்க எளிய வழி, வரியாகக் கட்ட வேண்டிய பணத்தை மாதம்தோறும் சேர்ப்பதுதான்.

வரிப் பணத்தை மட்டும்தான் இப்படிச் சேர்க்க வேண்டும் என்பதில்லை. ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீட்டு பாலிசிக்கான பிரீமியம், குழந்தைகள் பள்ளி, கல்லூரிக்கான கட்டணம் எனப் பலவற்றுக்கும் தேவைப்படும் பணத்தை இப்படிச் சேர்க்கலாம்.

இப்படி சேர்க்க நினைக்கும் பணத்தை எதில் சேர்க்கலாம் என்று கேட்கிறீர்களா?

ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள் எனில் வங்கி ஆர்.டி திட்டம் சிறந்ததாக இருக்கும். அஞ்சலக ஆர்.டி திட்டத்தையும் தேர்வு செய்யலாம். கொஞ்சம் ரிஸ்க் எடுக்க விரும்புகிறவர் எனில், கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தைத் தேர்வு செய்யலாம்!


https://www.vikatan.com/business/finance/guidance-for-tax-saving-2


Share:

அவசரகால நிதியை சரியாக உருவாக்கும் கலை..! சி.பாரதிதாசன் நிதி ஆலோசகர், WMS Planners

 அவசரகால நிதியை சரியாக 

உருவாக்கும் கலை..!

BHARATHIDASAN S

சி.பாரதிதாசன் நிதி ஆலோசகர், https://www.wmsplanners.com/

இன்றைய சூழலில், கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஒருவருக்கு எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம் என்பதே மறுக்க முடியாத உண்மையாக இருக்கிறது. முன்பெல்லாம் கடன் வாங்க வேண்டிய சூழல் பலருக்கும் எப்போதாவதுதான் ஏற்படும். ஆனால், கோவிட் - 19 தொற்று நோய் தாக்கத்துக்குப் பிறகு, அடிக்கடி கடன் வாங்க வேண்டிய கட்டாயம் பலருக்கும் ஏற்படுகிறது. வேலை இழப்பு, வருமானம் குறைந்தது, மருத்துவச் செலவுகள் அதிகரித்திருப்பது எனப் பல காரணங்களால் இந்தச் செலவு அதிகரித்திருக்கிறது. இதன் விளைவு, அவசரகால நிதி (Emergency Fund) என்பது அனைவருக்கும் மிகவும் அவசியம் என்பதை உணர்த்தியிருக்கிறது.

சி.பாரதிதாசன் 
நிதி ஆலோசகர், 
https://www.wmsplanners.com/
சி.பாரதிதாசன் நிதி ஆலோசகர், https://www.wmsplanners.com/

அவசரகால நிதி ஏன் அவசியம் தேவை?

எதிர்பாராத திடீர் செலவுகள் ஒருவரைக் கடன் சுமையில் தள்ளாமல் இருக்கவும், நீண்ட நாள் சேமிப்பு (வங்கி ஃபிக்ஸட் டெபாசிட், தங்கம்) மற்றும் முதலீடு (மியூச்சுவல் ஃபண்ட், பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட்) கரையாமல் இருக்கவும், வேலை இழப்பு ஏற்பட்டால், அடுத்த நல்ல வேலையில் சேரும் வரை குடும்பச் செலவுகளைச் சமாளிக்கவும் அவசரக் கால நிதியைச் சேர்த்து வைப்பது அவசியமாகும்.

திடீர் விபத்து மற்றும் உடல்நலப் பாதிப்பின் போது ஏற்படும் மருத்துவச் செலவுக்குக் காப்பீடு கைகொடுக்கும். இருந்தாலும் அதை நம்பி 100% இருக்க முடியாது. காரணம், மருத்துவக் காப்பீட்டில் அனைத்து நோய் களுக்கும், அனைத்துச் செலவுகளுக்கும் இழப்பீடு கிடைக்காது. வழக்கமான மருத்துவ பாலிசிகளில் சில நோய்களுக்கான மருத்துவச் செலவுகளுக்கு இழப்பீடு கிடைக்காது. இதுபோன்ற நேரங்களில் அவசரகால நிதி இருந்தால்தான் நிலைமையை எளிதாகச் சந்திக்க முடியும்.

அவசரகால நிதி: எவ்வளவு?

பொதுவாக, குடும்பத்தின் மாதச் செலவு, வீட்டு வாடகை, மின்சாரக் கட்டணம், கடன் தவணை, வங்கி, தபால் அலுவலக ஆர்.டி, மியூச்சுவல் ஃபண்ட் எஸ்.ஐ.பி முதலீட்டுத் தொகை ஆகியவற்றின் கூட்டுத் தொகையைப் போல் குறைந்தது 3 - 6 மடங்கு தொகையை அவசரகால நிதியாக வைத்துக்கொள்ள வேண்டும். குடும்பத்தில் வயதானவர்கள், தீவிர நோய் பாதிப்பு உள்ளவர்கள் இருந்தால், சற்றுக் கூடுதலாக அவசரகால நிதி வைத்திருப்பது நல்லது.

அடுத்து, வேலையின் தன்மையைப் பொறுத்தும் அவசரகால நிதி வைத்திருக்க வேண்டும். திடீரென வேலை இழப்பு ஏற்படக் கூடிய துறைகளில் பணிபுரிபவர்கள், நிரந்தர வேலையில் இல்லாதவர்கள் கூடுதலாக இந்த நிதியைச் சேர்த்து வைப்பது நல்லது.

நிதிச் சேவைகள், எஃப்.எம்.சி.ஜி மார்க் கெட்டிங் போன்ற துறைகளில் பணிபுரிபவர் களுக்கு, மற்ற துறை சார்ந்த ஊழியர்களைவிட வேலை கிடைப்பது சுலபமாக இருக்கும். அது போன்றவர்கள் 3 முதல் 6 மாதச் செலவு தொகையை அவசர கால நிதியாக வைத்துக் கொண்டால் போதும்.

விமானச் சேவை, தொலைத்தொடர்பு சேவை, ரியல் எஸ்டேட் போன்ற துறைகளில் பணிபுரிபவர்கள் சற்றுக் கூடுதலாக அவசர கால நிதி வைத்திருப்பது அவசியமாகும்.

மேலும், ஒருவரின் வாழ்க்கை முறை (lifestyle) மேம்படும்போது, அவசரகால செலவுத் தொகையின் மடங்கை அதிகரித்துக்கொள்வது அவசியமாகும். கொரோனா பாதிப்பு, இந்தத் தொகையை 12 மடங்கு வரைக்கும் வைத் திருப்பது நல்லது என உணர்த்தியிருக்கிறது.

அவசரகால நிதிக்கான தொகையை மாதம்தோறும் கொஞ்சம் கொஞ்சமாக முதலீடு செய்து வரலாம். அல்லது இதர செலவுகளைத் தவிர்த்துவிட்டு, மொத்தமாகச் சில மாதங்களில் சேர்த்துவிடலாம்.

எந்த முறையில் சேர்ப்பது..?

இந்தத் தொகையை உடனடியாக, விரைந்து எடுத்து பயன்படுத்தும் விதமாக ஏ.டி.எம் கார்டு வசதி கொண்ட வங்கிச் சேமிப்புக் கணக்கு, மியூச்சுவல் ஃபண்டில் அதிக பட்சம் ஒரு நாளில் பணமாக்கக்கூடிய லிக்விட் ஃபண்டு களில் பிரித்து முதலீடு செய்வது வைக்க வேண்டும். இந்த அவசரகால நிதியை முதலீடு செய்யும்போது, போட்ட பணத்துக்கு பங்கம் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அடுத்து, வேகமாகப் பணமாக்கக்கூடியதாக இருக்க வேண்டும். இந்த முதலீட்டின் மூலம் லாபம் பார்ப்பது என்பதைவிட அவசரகாலச் செலவுக்குப் பயன்படும் விதமாக இருப்பது மிக முக்கியம் என்பதை அனைவரும் உணர வேண்டும். இதில் எந்த ரிஸ்க்கும் எடுக்கக் கூடாது.

ஒருமுறை செலவானால், மீண்டும் சேர்க்க வேண்டும்...

அவசரகால நிதியிலிருந்து, பணத்தை எடுத்துச் செலவு செய்யும்பட்சத்தில், சிறிது காலத்தில் மீண்டும் அதே அளவில் பணத்தைச் சேர்ப்பது அவசியம். உதாரணமாக, ஒருவர் அவசரகாலச் செலவுக் கென ரூ.1.5 லட்சம் சேர்த்து வைத்திருக்கிறார். அதில் திடீரென ஏற்பட்ட மருத்துவச் செலவுக்கு 20,000 ரூபாயைச் செலவிடுகிறார். அடுத்துவரும் மாதங்களில் மீண்டும் கொஞ்சம் கொஞ்சமாகப் பணம் சேர்த்து, அவசரகால நிதியை ரூ.1.5 லட்சமாக உயர்த்துவது அவசியம். அப்போதுதான் மீண்டும் ஏதாவது நிதிச் சிக்கல் வந்தால், சிரமம் இல்லாமல் சமாளிக்க முடியும்.

மியூச்சுவல் ஃபண்டுகளில் வைத்திருக்கலாமா?

குறுகிய காலத்தில் அதிக ரிஸ்க் கொண்ட ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் அவசரகாலத் தொகையை வைத்திருக்கக் கூடாது.

அடுத்து, இந்த அவசரகால நிதியைக் கணவன், மனைவி இணைந்து ஜாயின்ட் வங்கிக் கணக்கில் வைத்திருப்பது நல்லது. அப்போதுதான் ஒருவருக்கு பிரச்னை ஏற்படும்போது மற்றவர் சிரமம் இல்லாமல் பணத்தை எடுத்து செலவு செய்ய முடியும்.

அவசரகால நிதி மூலமும் வருமானம்..!

சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச பராமரிப்புத் தொகைக்கு மேற்படும் தொகை, ஃபிக்ஸட் டெபாசிட்டுக்குத்தானே மாறிக்கொள்ளும் வசதி கொண்டதில் அவசரகால நிதியைப் போட்டு வைத்தால், அந்தத் தொகையைப் பயன்படுத்தாத காலத்தில் கூடுதல் வட்டி கிடைக்கும்.

மூன்று மாதத்துக்கான செலவுத் தொகையை விரைந்து பணமாக்கும் திட்டங்களில் முதலீடு செய்து வைத்திருக்கும் அதே நேரத்தில், அதற்கு மேற்பட்ட காலத்துக்கான தொகை இருக்கும்பட்சத்தில் அதை ஓரிரு நாள்களில் பணமாக்கக்கூடிய ஃபிக்ஸட் டெபாசிட், குறுகிய கால கடன் ஃபண்டுகள், கன்சர்வேடிவ் ஹைபிரிட் ஃபண்டுகளில் முதலீடு செய்து வைக்கலாம்!

SRC: https://www.vikatan.com/business/finance/guidance-for-emergency-fund

Share:

ஆயுள் காப்பீடு: செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை!

 

ஆயுள் காப்பீடு: செய்ய வேண்டியவைசெய்யக் கூடாதவை..!

சி.பாரதிதாசன், நிதி ஆலோசகர், Wmsplanners.com

ஆயுள் காப்பீடு & மருத்துவக் காப்பீடு எடுக்கும் போது எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக் கூடாது என்பதில் நம்மில் பலருக்கு குழப்பம் இருக்கிறது.

ஆயுள் காப்பீடு...!

ஆயுள் காப்பீட்டை எதற்காக எடுக்க வேண்டும் என்பதை அறியாமல், பலரும் பெற்றோரின் கட்டாயத்தின் பேரிலோ, சில காப்பீட்டு முகவர்களின் நிர்ப்பந்தம் காரணமாகவோ பாலிசி எடுக் கின்றனர். 

இன்னும் சிலர் இதை முதலீடாக நினைத்து எடுக்கிறார்கள். ஒரு சிலர், குழந்தைகளின் பேரில் உள்ள அன்பின் காரணமாக உயர் கல்விக்குத் தேவைப்படும் என நினைத்து பாலிசி எடுக்கின்றனர்.

இவை அனைத்துமே தவறான வழிமுறைகள் ஆகும். காரணம், பாலிசி முதிர்வின்போது சுமார் 5% வளர்ச்சி அடைகிறது. ஆனால், கல்விக்கான பணவீக்க விகிதம் 10 சதவிகிதத்துக்கும் மேல் உள்ளது. அதனால், இந்த பாலிசி மூலம் கிடைக்கும் தொகை, கல்விக் கட்டணத்தை முழுமையாக ஈடுசெய்ய உதவுமா என்பது கேள்விக் குறியாக உள்ளது. பொதுவாக, குழந்தைகளுக்கு ரிஸ்க் அதிகம் இருக்க வாய்ப்பில்லை. மேலும், குழந்தைகளால் குடும்பத்துக்கு வருமான இழப்பு ஏற்படாது. எனவே, பிள்ளைகள் பெயர்களில் பாலிசி எடுப்பதைத் தவிர்ப்பதே சரியான அணுகுமுறையாக இருக்கும்.

இரண்டாவது காரணம், முந்தைய காலங்களில் கடன் பத்திரங்களின் மூலம் கிடைக்கும் வட்டி வருமானம் அதிகமாக இருந்தது. பணவீக்க விகிதம் குறைவாக இருந்தது. எனவே, எண்டோவ்மென்ட் போன்ற பாலிசிகள் முதலீடாகப் பயன்படுத்தப் பட்டது, ஆனால், தற்போதைய நிலை வேறு, வட்டி விகிதம் கணிசமாகக் (5%), குறைந்துள்ளது. இனிவரும் காலங்களில் இது மேலும் குறைய வாய்ப்புள்ளது. எனவே, இன்ஷூ ரன்ஸ் எடுப்பதை முதலீட்டுத் திட்ட மாகக் கருதவே கூடாது.

சி.பாரதிதாசன்,
நிதி ஆலோசகர்,
Wmsplanners.com

ஆயுள் காப்பீடு எவ்வளவு எடுக்க வேண்டும்?

காப்பீடு என்பது ரிஸ்க்கை டிரான்ஸ்பர் செய்யும் ஓர் ஒப்பந்தம் ஆகும். அதாவது, தன் சுமையை இன்னொருவர் மீது மாற்றுவதாகும். ஒரு குடும்பத்தில் யார் வருமானம் ஈட்டுகிறாரோ, அவர் பேரில்தான் ஆயுள் காப்பீடு எடுக்க வேண்டும். அப்போதுதான் அவருக்கு ஏதேனும் அசம்பாவிதம் நேர்ந்தால், ஆயுள் காப்பீட்டின் மூலம் அவரது குடும்பத்துக்கு நிதி ஆதாரம் கிடைக்கும்.

காப்பீடு எடுக்கும்போது வருமானம் ஈட்டும் நபரின் வயது மற்றும் வருமானத்தைக் கணக்கில் கொண்டு, ஹியூமன் லைஃப் வேல்யூ (ஹெச்.எல்.வி) அடிப்படையில் காப்பீடு கவரேஜ் தொகை இருக்க வேண்டும். அப்போதுதான் அவர் இல்லை என்றாலும், அவரின் குடும்பத்துக்கு எந்த நிதி நெருக்கடியும் ஏற்படாது.

மாதம் ரூ.1 லட்சம் வருமானம் ஈட்டும் நபர் ரூ.5 லட்சத்துக்கு விபத்துக் காப்பீடு எடுத்து, அதன்மூலம் உயிரிழப்பு ஏற்பட்டிருந்தால், விபத்துக் காப்பீடாக வெறும் ரூ.10 லட்சம் மட்டுமே கிடைக்க வாய்ப்பு உண்டு. இந்தத் தொகையை வைத்து அந்தக் குடும்பத்துக்கு ஏற்படும் வருமான இழப்பைச் சரிசெய்ய முடியாது. எனவே, ஆண்டு வருமானத்தைப்போல் 12 முதல் 20 மடங்கு அளவுக்கு ஆயுள் காப்பீடு எடுக்க வேண்டும். 

அதாவது, ஆண்டு வருமானம் ரூ.12 லட்சம். இதை 15 ஆண்டுக்கு எடுத்தால், ரூ1.8 கோடி அளவுக்கு ஆயுள் காப்பீடு எடுக்க வேண்டும். அப்படி எடுத்து, கிடைக்கும் இழப்பீட்டு தொகைக்கு 7% (1,80,00,000 X 7%/12) வருமானம் கிடைத்தால், மாதம் ரூ.1 லட்சம் வருமானம் கிடைக்கும்.

ரூ.1.8 கோடிக்கு எண்டோவ் மென்ட் பாலிசியை எடுக்க வேண்டுமெனில், அதிக பிரீமியம் கட்ட வேண்டியிருக்கும். ரூ.1.8 கோடிக்கு 30 வயது நபருக்கு ஆண்டு பிரீமியம் ரூ.35,000 ஆகும். ரூ.1.8 கோடிக்கு எண்டோவ்மென்ட் பாலிசி எடுக்க ஆண்டு பிரீமியம் சுமார் ரூ.9 லட்சம் கட்ட வேண்டும். ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வருமானம் ஈட்டும் நபர் ரூ.9 லட்சம் பிரீமியம் கட்ட முடியுமா? எனவே, டேர்ம் பிளான் சரியானதாக இருக்கும்.

ஏன் டேர்ம் பிளான் எடுக்க வேண்டும்?

ஒருவர் எண்டோவ்மென்ட் பிளானில் ஆண்டுக்கு ரூ.9 லட்சம் பிரீமியம் என 20 வருடங்கள் செலுத்தினால் அதிகபட்சம் ரூ.3.5 கோடி முதிர்வுத் தொகையாகக் கிடைக்கும். ஆனால், இதற்குப் பதிலாக, ரூ.2 கோடிக்கு டேர்ம் பிளான் எடுத்தால், ஆண்டுக்கு ரூ.40,000 பிரீமியம் கட்டினால் போதும்.

இந்த இன்ஷூரன்ஸ் ஒருபக்கம் இருக்க, மாதம் தலா 10,000 ரூபாயை ஸ்மால்கேப் ஃபண்ட், மிட்கேப் ஃபண்ட், மல்ட்டி அஸெட் ஃபண்ட் ஆகியவற்றில் பிரித்து மொத்தம் முதலீடு செய்யலாம். இவ்வாறு முதலீடு செய்து, அதன்மூலம் குறைந்தது 12% வளர்ச்சி அடைந்தால்கூட, 20 ஆண்டுகள் கழித்து, ரூ.3 கோடி கிடைக்கும். இந்த ரூ.3 கோடியைக் கொண்டு பிள்ளைகளின் உயர்க் கல்வி, திருமணத் தேவை மற்றும் உங்களின் ஓய்வுக்கால தேவை உள்பட பல தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளலாம்.

புதிதாக இன்ஷூரன்ஸ் எடுக்க நினைப்பவர்கள் இந்த விஷயங்களை எல்லாம் மனதில் கொண்டு செயல்படுவது நல்லது! 
நன்றி: நாணயம் விகடன்
கட்டுரை ஆசிரியரை தொடர்பு கொள்ள

S.Bharathidasan, 

Chartered Financial Practitioner, 

PUDUCHERRY & CHENNAI 


S.Bharathidasan DECE, BA, FChFP (Singapore).

Chartered Financial Practitioner

Wealth Management Solutions

GST Registration & Filing

No.353, Kamaraj Salai,

Opposite to Kadhi,

 New Saram,

PUDUCHERRY – 605 013


Corporate Office

No. 3/267C, IVth Cross Sengeni Amman Koil, Street,

Neelangarai,

Chennai – 600 115

MOB; 94441 94869, 

99528 74869

Email id: s_bharathidasan@yahoo.com

mailsbdpdy@gmail.com

Share:

Search This Blog

Blog Archive

Powered by Blogger.

Recent Posts